2003 ஆம் ஆண்டு கல்லூரியில் இருபாலாரும் கல்விபயிலும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. 2003- இல் நான்கு பேராசிரியர்கள் என்ற அளவில் தொடங்கிப் படிப்படியாக இன்று 25 பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்ற நிலைப்பாடு தமிழ்த்துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முகமாய் அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 2019 ஆம் ஆண்டில் இளங்கலைத் தமிழ் (B.A. Tamizh) அறிமுகப்படுத்தப்பட்டது.
இளங்கலையில் முதலாமாண்டு பயில்கிற அனைத்துப் பட்டவகுப்பு மாணவர்களுக்கும் மொழிப்பாடம் (FOUNDATION TAMIL), தமிழல்லாத பிறமொழி பயின்று வருபவர்களுக்கு அடிப்படைத் தமிழ் (BASIC TAMIL), என்கிற நிலையிலும், இரண்டாமாண்டு மாணவர்களில் இளங்கலை (B.A), இளம் அறிவியல் (B.Sc), இளம் வணிகவியல் (B.COM(CS)) ஆகிய பட்டவகுப்புகளிலுள்ள
மாணவர்களுக்கும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தலோடு மட்டுமல்லாது அவர்களை எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அமைக்க சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், எனப் பல்துறையில் வளர்த்தும் குறிப்பாகச் சமூகத்தின்பால் அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொள்ள தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறந்த வழிகாட்டிகளாக
இருந்து வருகின்றார்கள். மேலும் பிற கல்லூரிகளில் நிகழும் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கும் ஊடகங்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள்.
சங்க இலக்கியங்களைக் கற்பதன்வழித் தமிழ்மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பழமை முதலானவற்றை அறிவதோடு தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுத் தமிழின் தனித்துவத்தை அறிந்துகொள்ளுதல்.
அக இலக்கியம் கற்பதன் வாயிலாகப் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளாகிய காதல், இல்வாழ்க்கை, முதலானவற்றை உணர்ந்து இக்காலத்திற்கு எது தேவையோ அதைப் பின்பற்றுவதற்கு உறுதுணைபுரிதல்.
புற இலக்கியம் பண்டைத் தமிழர்கள் எத்தகைய போர்நெறியைக் கொண்டிருந்தனர் என்பது பற்றியும் நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்கும் எல்லையை விரிவுபடுத்துவதற்கும் எத்தகைய செயல்களில் ஈடுபட்டனர் என்பதை அறிவதற்கும் உதவிபுரிகிறது. நம்முன்னோர் எத்தகைய கொடையாளியாக விளங்கினர் என்பதையும் அறிந்துகொள்வதற்கு அவ்விலக்கியம் பயன்படுகிறது.
இரந்தோர்க்கு ஈதல், கள்ளுண்ணாமை, உயிர்கொலை செய்யாமை, நன்றி மறவாமை முதலான தமிழர்களின் அறநெறியை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துக் கூறி நன்னெறியைப் புகட்டுவதற்கு அற இலக்கியங்கள் பயன்படுகின்றன.
பக்தி இலக்கியம் கற்பதன் வாயிலாகத் தமிழகத்தில் இருந்த பல்வேறு சமயங்கள் பற்றியும் அவற்றின் கொள்கைகள் பற்றியும் வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிந்துகொள்ளுதல்.
பண்டைத் தமிழர்களில் குடிமக்கள், முடிமன்னர் இவர்களின் வாழ்வியல் வரலாற்றைப் புனைந்துரைத்து எழுதப்படும் காப்பியங்கள் மாணவர்கள் தம் வாழ்வில் ஏற்படுகிற இன்னல்களைக் களைந்துகொள்வதற்கும் மனவெழுச்சியை வளர்த்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.
தமிழக வரலாற்றைக் கற்கின்றபொழுது பழந்தமிழ்ச் சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம் பற்றியும் தமிழரசர்களைப் பற்றியும் ஆட்சி மாற்றத்தால் மக்கள் எத்தகைய நன்மை, தீமைக்கு ஆட்பட்டனர் என்பது பற்றியும் அறிந்துகொள்ளலாம். ஒரு புதிய சட்டம் இயற்றும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பயன்பற்றியும் ஆராயக்கூடிய மனப்பக்குவத்தையும் தெளிவான சிந்தனையையும் மாணவர்கள் பெறுவர். போட்டித் தேர்வின்போதும் நேர்காணலின்போதும் தெளிவான பதிலை முழு தைரியத்தோடு வெளிப்படுத்த
இவ்வரலாறு பெரிதும் துணை நிற்கும்.
தமிழ் இலக்கிய வரலாறு கற்பதன் வாயிலாகக் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ளுதல். தமிழிலக்கியப் பரப்பைப் பிறருக்கு எடுத்துரைக்கவும் பயன்படுகிறது.
அகராதியியல் பயில்வதன் வழி தமிழ்ச்சொற்களின் பொருளை அறிந்து கொள்ளுதல், அதன் வேர்ச்சொற்களைக் கண்டறிந்து அது உலகமொழிகளில் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுகின்றனர். இதழியல் பயில்வதன் வாயிலாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை அறிந்துகொள்ளுதல், கதை, கவிதை எழுதுவதற்கும் இதழை எடுத்து
நடத்துவதற்கும் பயனுடையதாக விளங்குதல்.
தமிழ் இலக்கியங்கள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் மொழிபெயர்ப்பினால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்வதற்குப் பயன்படுகின்றது.
நாட்டுப்புறவியல் பயில்வதன் வாயிலாக ஒரு நாட்டின் உண்மையான வரலாற்றையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கலை இலக்கியத்தையும் மாணவர்கள் அறியமுடியும். ஏட்டிலே வராத எழுத்திலே காணமுடியாத ஆனால் மக்கள் உள்ளத்திலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் அப்படியே மாணவர்களுக்குப் படம்பிடித்துக் காட்டுவது இவ்விலக்கியம். சமுதாய வளர்ச்சியை நிறைகுறையோடு காட்டக்கூடிய கண்ணாடியாக இவ்விலக்கியம் விளங்குகிறது.
படைப்பிலக்கியம் பாடத்தைக் கற்பதன் வாயிலாகக் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியங்கள் தமிழ்மொழியில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன என்பது பற்றி அறிவதற்குக் காரணமாக அமைகிறது. மாணவர்கள் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக உருவாகுவதற்கும் இவ்விலக்கியம் ஊக்கத்தைத் தருகிறது.
தரமான தமிழ்க்கல்வியின் வழித் தமிழ்மொழி உணர்வும் கலை, இலக்கியத்திறனாய்வுப் பார்வையும் சமூக அக்கறையும் மானுட விழுமியங்களைப் போற்றும் எண்ணமும் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்ட திறன்மிக்க சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குதல். தரமான தமிழ்க்கல்வியின் வழித் தமிழ்மொழியில் ஆளுமையும் தமிழரின் கலை, இலக்கிய வடிவங்களைத் திறனாய்வுடன் அணுகும் பார்வையும் கைவரப்பெற்ற ஆற்றல்மிக்க இளைய மாணவர்களை உருவாக்குதல்.
தமிழுக்கும் – வரலாறு, தத்துவம், தொல்லியல், நாட்டுப்புறவியல், இசை, ஊடகவியல் உள்ளிட்ட பிற துறைகளுக்குமான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றிற்கான
அடிப்படைகளைக் கற்பித்தல்.
காரண காரிய தொடர்புடன் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் வகையிலும் படைப்பாக்கத் திறனைத் தூண்டும் வகையிலும் பயிற்சிகள் அளித்தல்.
ஒரு செமஸ்டர் கட்டணம் INR 18200/- ஆகும்.